Saturday, February 26, 2011


வாழ்க்கைப் போராட்டாத்திலும் வேலைப் பழுவிலும் நாம் நம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். அதனால் ஏற்படும் மனவேதனையில் எங்கே நிம்மதி? என நிம்மதியைத் தேடுகின்றோம். உண்மையில் நிம்மதி நம்மிடமே இருக் கின்றது அதைத்தேடி அலைய வேண்டியதில்லை.நிம்மதி வேண்டுமாயின் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்.
உலக உயிர்கள் அனைத்திற்கும் ஓய்வு அவசியம். உடலுக்கு முழுமையான ஓய்வைக் கொடுப்பது நித்திரையே. முன்பெல்லாம் மனிதர்கள் உடலால் உழைத்து வாழ்ந்தார்கள் . அதனால் அவர்கள் நன்றாக நித்திரை செய்தார்கள். இந்த கணினியுகத்திலோ பெரும்பாலானோர் இருந்த இடத்திலிருந்தே வேலைசெய்கின்றனர். மனிதனின் உடல் உழைப்பு குறைந்து மூளைக்கு வேலை கூடிவிட்டது. உடல் உழைப்பு இல்லாததால் நித்திரைக்கும் மருந்து தேவைப்படுகின்றது.
நித்திரை இன்மைக்கு பொதுவாக உடல்நலக் குறைவு, மனஉளைச்சல் (கோபம், குரோதம், பயம், காதல் போன்ற உணர்வுகள்) காரணம் என்றாலும் வேறுகாரணங்களும் இருக்கின்றன. நேரம் போவது தெரியாது தொலைக்காட்சி பார்ப்பது மணிக்கணக்கில் செல்போனில் பேசுவது இன்டநெற்றில் இருப்பது அதிக உணவை வயிறுபுடைக்க உண்பது அல்லது உண்ணாமலே உறங்குவது போன்ற இன்றைய பழக்கங்களும் நித்திரையைக் குறைக்கின்றன.
நித்திரை குறைந்தாலும் கூடினாலும் உடல்நிலை பாதிக்கப்படும். மெலட்டோனின் (Melatonin ) என்னும் ஓமோன் சுரப்பதாலேயே எமக்கு நித்திரை வருகின்றது. இந்த ஓமோன் அதிகமாகச்சுரந்தால் நித்திரையும், குறைவாகச் சுரந்தால் நித்திரை இன்மையும் ஏற்படுகின்றது. இவ்வோமோன் வெளிச்சத்தில் குறைவாகவும் இருளில் அதிகமாகவும் சுரக்கின்றது. எனவே இருளான இடத்தில் நன்றாக நித்திரை வரும். மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் ஓய்வைக்கொடுத்து புத்துணர்ச்சியை தருவது நித்திரையே.
நித்திரைக்கும் ஞாபகசக்திக்கும் உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். ஆழ்ந்த நித்திரை கற்கும் ஆற்றலைக்கூட்டும்.படித்து களைத்திருக்கும் மூளை நித்திரையால் புத்துணர்ச்சி பெற்று காலையில் எழும்பும் பொழுது ஞாபகசக்தி அதிகரிக்கும். நித்திரை இன்னையால் சோர்வு கவனக்குறைவு, மறதி, போன்றவையுண்டாகும்.
நித்திரையின் போது சுரக்கும் ஓமோன்கள் உடலின், கொழுப்பைக் குறைத்தல், தசைகளைப் பழுதுபார்த்தல், தோலைப் புதுப்பித்தல் போன்றவற்றைச் செய்து உடலின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
மன உளைச்சல்களால் வரும் மனஅழுத்தத்தின் போது கோர்டிசோல் (Cortisol) எனும் ஓமோன் சுரக்கும். இதனால் நித்திரையின்மை ஏற்படுவதோடு இரத்த அழுத்தமும் கூடும். இரத்த நாடிகளில் கல்சியப்படிவை உண்டாகி அவற்றை தடிப்படையவும் செய்யும். அதனால் இருதயநோய்க்கு நித்திரையின்மை காரணமாகின்றது. எனவே மனிதவாழ்க்கைக்கு நித்திரை மிகவும் முக்கியமாகும். சிறுவர்கள் 10 மணிநேரமும் பெரியவர்கள் 6-7 மணிநேரமும் குறைந்தது நித்திரை கொள்ளவேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா? கவலைகளை ஒருபுறம் மூட்டைகட்டி வைத்துவிட்டு சூடான பாலில் 2 தேக்கரண்டி தேன்விட்டு கலக்கிக் குடியுங்கள். நல்ல காற்றோட்டமுள்ள இருளான சத்தமில்லாத இடத்தில் உறங்குங்கள். உங்கள் இமைகள் நித்திரையை தழுவ நிம்மதி உங்களைத் தழுவிக்கொள்ளும்.
கூட்டில் வாழும் பறவை
மிக எளிய ஆசைகளை
துளிகளாக்கிப்
பெய்கிறது மழை
துள்ளிக் குதித்து
காற்று மொட்டுக்களாக
விரியும் அதன்
துளி நம்பிக்கையில்
கோடி ஜென்மங்களை வாழ்ந்து விடுகிறேன்
கொதிக்கும் கோபங்கள்
சிறு விட்டுக் கொடுத்தலில்
இருந்த இடம் தெரியாமல்
குளிர்ந்து விடுகிறது
ஆயிரம் பிரச்னைகளுடன்
விடியும் பகல்
அந்திக்குப் பின்
சந்தோஷமாக கைகுலுக்கி
விடைபெறுகிறது
ஏன் பெண்ணாகப் பிறந்தோம்?
-
இப்படி
நோகடிக்கும் சம்பவங்கள்
ஆயிரம் இருப்பினும்
பெண்ணால் மட்டும்தான்
எல்லாம் முடியும்
என்பதன்
சாட்சியாக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!